பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.

இத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.

இந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.

‘ என்ன சார், உள்ள வாங்க ?’ என்றதும்.

‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘

இதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.

‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.

‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.

‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.

‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.

‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.

பெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.

ப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.

ப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

என் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.

ப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.

நாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.

சரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.

பேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.

பார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.

ஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.

வாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.

கோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.

நான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.

அவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.

மறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.

கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.

சீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.

காளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.

மாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.

அவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

ப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

கட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.

அவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.

அவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.

பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.

கட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.

நான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.

வெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.

ரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.

ப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.

அவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.

ஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.

வீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.

இவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ?

இதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.

நான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.

இடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.

ஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.

பசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.

எங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.

இதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.

ஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.

அவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.

எனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.

அவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.

கோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.

அன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .

கிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.

அம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.

கையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.

இந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.

மருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.

காதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.

திருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

மாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.

ப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.

ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.

நாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.

மறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.

தண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.

கடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.

வீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.

கடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.

சரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

அவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.

நடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.

அவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.

அவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.

சரியான பாதை வழியாகவே போனார்.

இன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.

நான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.

சடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.

நான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.

இடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.

எங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.

நல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.

அதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.

அவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.

வளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.

கல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.

ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.

அனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.

எதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், உமாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.

பின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

குப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.

அப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.

அவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

ஒரு வழியாய் நிலா பிறந்தாள்.

நிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.

ப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.

வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.

கோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.

‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.

‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.

‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.

அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா ? எல்லாம் முடிஞ்சிருச்சா? ‘ என்றார் வேகமாக.

‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.

கோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.

அது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.

ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.

எப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.

இரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.

ப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.

ப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.

ஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.

வழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.

இறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.

கொடுமையான காத்திருப்பாய் இருந்தது. என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதன் உச்ச கட்டமாய் அப்பாவின் வருகைக்கான காத்திருப்பு.

அடிபட்ட இடங்கள் வலித்துக் கொன்றன. வீங்கிய பகுதிகளை கைகள் அனிச்சையாய் தேய்த்துக் கொடுத்தன. நண்பர்கள் வலி தாங்கிய முகத்தோடு அமைதியாய் இருந்தார்கள்.

பவர் ஹவுஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிற்கு தகவல் சொல்லப் பட்டுவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். வந்து என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியவில்லை.

சாமி வருவது போல் வரும் அப்பாவுக்குக் கோபம். கோபம் வந்ததென்றால் கைக்குக் கிடைத்த பொருள்கள் பறக்கும். சிறு வயதில் நொடிக்கொரு தடவை அம்மாவிடம் அடி வாங்கினாலும் பயம் வந்ததே இல்லை. மாறாக அப்பாவின் முறைப்பே நடுங்கடித்து விடும். முதுகெலும்பை ஊடுருவும் அவரின் பார்வையில் அது வரையிலான அத்தனை தீர்மானங்களையும் போட்டுடைத்து சரணடைந்து விடுவோம் நானும், அக்காவும், தம்பியும்.

அம்மாவுடன் சண்டை போட்டுக் கோபத்தில் சாப்பிடாமல் கிடப்பேன். அப்பா வந்தவுடன் அம்மா வழக்கைக் கொண்டு போகும். போய்ச் சாப்பிடு என்ற ஒரு வார்த்தையை அப்பா தீர்பாய் சொல்வார். தாமதிக்காமல் போய் சாப்பிட்டு விடுவேன். நொடி தாமதித்தாலும் முதுகு வீங்கி விடும் என்பதை அனுபவ ரீதியாய் உணர்ந்ததே காரணம்.

நாங்கள் மூவரும் அணையின் நுழைவுப்பகுதியின் சுவரில் உட்கார்ந்திருக்கிறோம். அதிகாரியும் அடித்த நால்வரும் காவல்காரர்கள் மாதிரி நின்றிருக்கிறார்கள்.

சோலையார் அணைக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. ஊரில் அனைவருக்கும் அப்பாவைத் தெரியும். அனைவரும் மதிக்கும் படியாய் இருந்தார். அவருக்கு இன்று என்னால் அசிங்கம்.

சென்னை சென்ற ஒன்றரை ஆண்டுகளாய் அப்பாவும் பையன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் மரியாதையாய் நடத்தி வந்தார்.

நேற்று தான் சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்தேன். மறு நாளே இப்படி ஒரு சம்பவம்.

வால்பாறையில் இருந்து முக்கால் மணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பின்னான ஊர் சோலையார் அணை. இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான அணைக்கட்டு.

அணையைப் பாதுகாக்க பொதுப் பணித்துறையும், மீன்களைப் பாதுக்காக்க வளர்க்க, பிடித்து விற்க மீன் வளத்துறையும் ,அணையின் நீரில் மின்சாரம் எடுக்க
மின்சார வாரியமும் அங்கு இருக்கின்றது.

அப்பா மின் வாரியத்திற்காக இங்கு மின்சாரம் எடுக்க வந்திருக்கும் பலரில் ஒருவர். சிறு வயதில் இருந்து இங்கேயே இருந்து வருவதால் இதுச் சொந்த ஊரைப் போல ஆகிவிட்டிருந்தது.

அங்கிருக்கும் அனைவரையும் தெரியும். அணையையே நீச்சலிட்டு பலமுறை கலக்கி இருக்கிறோம் கூட்டமாக. அப்பாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்கும். அப்படி நினைத்துச் செய்தது தான் இப்படி முடிந்திருக்கிறது.

சென்னைக்குப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி இருந்தேன். பக்கத்து வீட்டில் இருக்கும் அதிகாரியின் (ஏ.இ மெக்கனிக்கல்) மைத்துனனும் அவனது நண்பன் ஒருவனும் கல்லூரி விடுமுறைக்கு திருச்சியில் இருந்து வந்திருந்தார்கள்.

ஊரிலிருந்து வந்த உடன் நேற்றைக்கு அறிமுகம் ஆனார்கள். இன்று காலையில் அணையைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்புக்கு இணங்கி கிளம்பினேன். அப்போதும் தெரியாது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழப் போகிறதென்று.

சந்தோசமாகக் கிளம்பினோம். அணை, வீட்டில் இருந்து பத்து நிமிடம் நடக்கும் தொலைவில் தான். அணையின் அனைத்துப் பகுதிகளையும் பல வருடங்கள் இங்கு வாழ்ந்த அனுபவத்தால் வந்த நுணுக்கத்தோடும் செய்திகளொடும் சுற்றிக் காட்டினேன்.

ஒத்த வயதுடையவர்கள் என்பதால் கலகலப்பாய் நேரம் போய்க்கொண்டிருந்ததது. அணைக்குள் இறங்கி நீரில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு கிடந்த பரிசலைப் பார்த்த உடன் நண்பர்களில் ஒருவன் கேட்டான் இதுல ஏறிப் போகலாமா? என்று.

நான் ஏற்கனவே பல முறைப் போயிருக்கிறேன் ஆனால் தனியாக அல்ல மின்வளத் துறைப் பணியாளர்களுடன்.இயந்திர படகில் கூட பலமுறை பயணித்திருக்கிறேன். இரண்டு நண்பர்கள் முகத்திலும் அப்படி ஒரு ஆவல். பெரும்பாலும் தெரிந்த அதிகாரிகள் தான் இருப்பார்கள் எனவே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.

உற்சாகக் கூச்சலிட்டார்கள் நண்பர்கள். ஒரு பெரிய வடைச் சட்டியைக் கவிழ்த்தது போல் கிடந்தது பரிசல். நிமிர்த்தினோம். பெரிய பளுவாக இல்லை. கவனமாய் நீரில் மிதக்கவிட்டோம். முதலில் அவர்களை ஏறவிட்டுப் பிடித்துக் கொண்டேன்.
கடைசியில் கவனமாக துடுப்போடு ஏறிக் கொண்டேன்.

ஏதோ சாதித்துக் கொண்டிருப்பது மாதிரி மலர்ந்திருந்தது நண்பர்களின் முகம். துடுப்புப் போட்டு பழக்கம் இல்லாததல் துடுப்புப் போடப் போட தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தது பரிசல். பிறகொரு முயற்சியில் முன்னகரத் துவங்கியது.
தொடர்ந்தது சாகசப் பயணம்.

அணை நீர் எத்தனைப் பனை மர உயரங்களை நிரப்பி விட்டு அமைதியாய் இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்கள் என்ற தைரியம் அடுத்தடுத்த துடுப்புத் தள்ளல்களுக்கான காரணமாக இருந்தது.

அணை நீரின் குளுகுளுப்பும், அக்கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களின் வனப்பும், துடுப்பை நீரில் வைக்கும் போது துவங்கும் சிறுவட்டம்
அணை முழுக்க பெரும் வட்டமாகி விரிகிற மாயஅழகும் அற்புதமாய் இருந்தது.

உலவும் தென்றல் காற்றினிலே என்று பாடத் துவங்கினான் அதிகாரியின் மைத்துனன். பாடி பழக்கம் இல்லாத குரலின் பாடலாக இருந்தது அது. பாடும் துணிச்சலற்றவனையும் பாட வைக்கும் சூழல் தான் பாட்டுப் போன்ற ஒன்றையும் இனித்து ரசிக்க வைத்துக் கொண்டிருந்தது. இதை விட இன்பமான பொழுதே இருக்கப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கரையில் காத்திருந்தது வாழ்வில் மறக்க முடியாத வலி.

அணையின் நடுப் பகுதியில் இருந்தே திருப்பிவிட்டோம். யாருக்கும் திரும்ப மனம் இல்லை. ஆனாலும் நேரமாகிவிட்டிருந்தது. கரையை நெருங்கும் போது நாலைந்து ஆட்கள் ஓடி வருவது தெரிந்தது. யாரோ என்னவோ என்று நினைத்து விட்டோம்.

அவர்கள் கரையில் காத்திருந்தார்கள். தண்ணீரை விட்டு இறங்கியது தான் தாமதம் சரமாரியாக அடிகள் விழத்துவங்கியது. கட்டை கம்புகளோடு தயாராய் இருந்திருக்கிறார்கள். துளியும் எதிர்பாராத ஒரு விபத்தைப் போல் இருந்தது. என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் தட தடவென்று அடிகள் இறங்கின.

ஒன்று கூடத் தெரிந்த முகமாய் இல்லை. லுங்கியும் பனியனும், சட்டையுமாய் அடியாட்களை போன்ற நாலு பேர். பேன்ட் சட்டையுடன் ஒருவன். ஒன்றும் புரியவில்லை. திரைப் பட கதாநாயகன் திடிரென்று அத்தனை பேரையும் அடித்துத் தூக்கிப் போட்டு பந்தாடுவது எத்தனைஏமாற்று வேலை என்று சுள்ளென்று உரைத்த கணம் அது.

அத்தனை அடி அடித்தவனையும் திருப்பி ஒரு அடி கூட அடிக்காத என்னை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இப்போதும். கோபம் வேறு அடுத்தவனை அடிக்கும் முரடுத்தனம் வேறு போல.

கொஞ்ச நேரத்திற்குப் பின் பொறுமையிழந்து ‘யாருடா நீங்க சும்மா விடமாட்டேன்டா ஒங்கள’ எனது பெரும் சப்தத்தில் சண்டை நிறுத்தி அமைதியானார்கள்.

தைரியமாய் எதிர்த்து அடிக்காவிட்டாலும் தைரியாமாய் சப்தமிட்டதும் தான் கைகளால் பேசுவதை நிறுத்தி வாய்ப் பேச்சிற்குத்தயாரானார்கள்.

அணையின் மேல் பகுதிக்கு வந்த பிறகு தான் அடி விழுந்ததற்கான காரணம் தெரிந்தது. மீன்வளத் துறையின் புதிய அதிகாரியும் புதிய மீனவர்களும் தான் அவர்கள். நான் சென்னையில் இருந்த காலத்தில் புதிதாய் வந்தவர்கள்.

சுற்றியிருக்கும் எஸ்டேட்டைச் சேர்ந்த யாரோ பரிசல் ஒன்றை ஏற்கனவே திருடிப் போய் திரும்பக் கிடைக்காத நிலையில் புதிய பரிசலைக்காப்பாற்றும் நடவடிக்கையாக நடந்திருக்கிறது அடி தடி.

புதிய பரிசலைத் திருடிப் போக முயற்சிக்கும் முகம் தெரியாத நபர்களாக நினைத்துத் தான் அவர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஒருவர் கூட தெரியாதவராய் போனதினால் எல்லாம் நேர்ந்தது. மின்வாரிய பையன்களுக்கு கொஞ்சம் சலுகை உண்டென்றாலும் என்னைத் தெரியாததில் வந்த குழப்பம்.

நாங்கள் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரி நம்பவில்லை. அப்பாவின் பெயர் சொல்லியும் அவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் சோகம். பின் அப்பா வந்து சொன்னால் தான் விடுவோம் இல்லையென்றால் காவல்நிலையம் என்றார்.

காத்திருக்கும் போது என்ன ஏது என்று விசாரிக்காமல் இப்படியா அடிப்பீர்கள். கொலை முயற்சின்னு கேஸ் கொடுப்பேன் என்று அதிகாரியைப் பார்த்து கத்தினேன்.

நண்பர்களைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. அவர்களும் எங்களால் தானே இப்படி ஆனது என்றார்கள். எங்கள் ஊரில் என்றால் இதில யாரும் உயிரோட இருக்கமாட்டார்கள் என்றார்கள் காதோரமாய்.

என் மனசு படபடத்துக் கொண்டிருந்தது. நான் பெரிய மனிதனாகி விட்டேன். எனக்கும் எல்லாம் தெரியும் என்று பெரிய மனித பாவனையில் நெஞ்சத்சைத் தூக்கி நடந்து விட்டு. அதை வீட்டில் உள்ளோரும் நம்பத் துவங்கும் நேரத்தில் இது. அப்பாவின் கருணையை வேண்டி காத்திருக்கிறது என் தப்பித்தல். அப்பாவின் கைகளில் ஒரு பந்தைப் போல சிக்கி இருக்கிறது என் தலை.

அவரின் நல்ல பெயருக்கு களங்கம் விளைவித்து இப்படி நடுத்தெருவுக்கு அழைத்து வந்த கோபம் எப்படி வெடிக்கப் போகிறதோ?

கைகளில் கால்களில் எல்லாம் வீங்கியிருந்தது. பல இடங்களில் ரத்தம் கன்றிப் போயிருந்தது. நேரமாகி விட்டது அப்பா எந்த நேரம் வரலாம். இந்த வலிகளை விட அவமானத்தை விட அப்பா என்ன செய்வார் என்பதே எதிர்பார்ப்பாய் இருந்தது.

கோபத்தில் வயது பாராமல் அவரும் நாலு அடி அடித்தாலும் அடிப்பார். இந்த அடிகளை விட அந்த அடிக்குத் தான் வலி அதிகமாய் இருக்கும். மனவலி. நடப்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது இப்போது.

வேகமாய் வந்து நின்றது ஈபி வேன். நின்று வண்டியின் இஞ்சின் அணையும் முன் அவசரமாய் இறங்குகிறது அப்பாவின் கால்கள். படபடத்து ஓடி வராமல் அழுத்தமாய் நடந்து வருகிறார் எங்களை நோக்கி.

இரண்டு நிமிடங்களில் தெரிந்து விடும் எல்லாம். மனசு எதற்கும் தயாராகத் தான் இருக்கிறது. அதுவரை உட்கார்ந்து இருந்தவன் அப்பாவைப் பார்த்ததும் எழுந்து நின்று கொண்டேன்.

அப்பாவைப் பார்த்ததும் அந்த அதிகாரி ‘சாரா, உங்க அப்பா’ என்று சொல்லி உதட்டைக் கடித்துக் கொண்டான்.

அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்திருக்கிறது. அப்பா நெருங்க நெருங்க என்னை அறியாமல் அது வரையிலும் கலங்காது இருந்த கண்கள் மழுக்கென்று நிறைந்தது.

அப்பா எதையும் கவனிக்காமல் என் முன்னால் வந்து நின்றார். என் தலை தானே கவிழ்ந்து கொண்டது. அடி வாங்குவதற்கும் அல்லது திட்டு வாங்குவதற்கும் புலன்கள் தயாரானது.

அப்பா என்ன நடந்தது என்றார் என்னிடம். அந்தக் குரலில் கோபமும்,அழுத்தமும்,முக்கியமான வழக்கில் தீர்ப்புக்கு முன்னால் கவனமாக விசாரிக்கும் நீதிபதியின் கண்ணியமும் ஒரு சேர கலந்திருந்தது.

என் குரல் உடைந்து போனது. நடந்ததையெல்லாம் சொன்னேன். சொல்லச் சொல்லவே எத்தக் கணத்தில் கோபம் தலைக்கேறி அவரை அறியாமல் வெடிக்குமோ என்று எதிர் பார்த்த படியே இருந்தேன்.

அடிச்சுட்டாங்க என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அப்பாவின் உடம்பு ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. கீழுத்தட்டைக் கடித்துக் கொண்டார். கண்கள் இன்னும் சிவந்தது. நான் சொன்னது ஏதும் காதில் விழுந்ததாய்த்தெரியவில்லை.

யாருடா உன்னை அடிச்சது என்ற உறுமல் சப்தத்தோடு அதிகாரியை நோக்கி நடக்கத் துவங்கினார். இது வரையில் எப்போதுமே பார்த்திராத அப்பாவின் உக்கிரம்.என்னால் நம்ப முடியவில்லை. அதிகாரியும் மற்றவர்களும் மிரண்டு பின் வாங்கினார்கள்.

அப்பா வேகமாய் அவர்களை நோக்கி நடக்கிறார். எதையும் செய்யத் தயங்காத கண்மண் தெரியாத கோபம். கோபம் என்பதை விடவும் அதைத் தாண்டிய வெறி அல்லது வேறேதோ ஒன்று. தனது குட்டிகளை,குஞ்சுகளை வேட்டையாட வருபவைகளிடம் தாயானபறவைகளுக்கும், விலங்குகளுக்கும் வருமே அதைப் போல ஒன்று.

அப்பா போன வேகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திடிரென சுதாரித்துக் கொண்டு ஓடினேன். அப்பாவைப் பிடித்துக் கொண்டேன். பிடிக்க முடியவில்லை. சாமி வந்தவர்களுக்கு வரும் வேகத்தில் திமிறினார்.தப்பு என்னோடது தாம்பா என்று கெஞ்சினேன்.

‘தப்பு நடந்துன்னா என்ன வேணாலும் பண்ணு, ஆன அடிக்க நீ யார்ரா’ என்று சப்தம் போட்டார். அதிகாரியும் மற்றவர்களும் அச்சத்தில் வாயடைத்து நின்றிருந்தார்கள். இதை எதிர்பார்க்காத வேனின் ஓட்டுனரும் வந்து அப்பாவைப் பிடித்துக் கொண்டார்.

அதற்குள் பொதுப் பணித் துறையின் உயரதிகாரி ஜீப்பில் வந்து சேர்ந்தார். அவர் பல ஆண்டுகளாய் அப்பாவோடு நன்றாக பழகியவர். எனக்கும் அவரைத்தெரியும். அவர் வந்து அப்பாவைச் சமாதானப்படுத்தியும் அப்பா சமாதானமாகவில்லை. எப்படி அடிக்கலாம் என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியில் அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்டார்.ஒரு வழியாய் பிரச்சனை தீர்ந்தது.

இந்த மனுசனுக்கு இப்படி ஓரு கோபமா நம்பவே முடியல என்று அப்பாவின் கோபத்தை கதையாய் பேசிக் கொண்டார்கள் ஊரில்.

அபூர்வமாய் காணக் கிடைப்பதும், அப்பாக்கள் வெளிப்படுத்தாது உள் உறங்கிக் கிடப்பதுமான இன்னொரு முகத்தையும் தரிசனப் படுத்தியதற்கு அந்த வலிகளுக்கும், சம்பவத்திற்கும் என்றும் நன்றியோடிருக்கக் கடமைப் பட்டவன் நான்.

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக்
கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும்
படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.

சென்னை வந்து சில ஆண்டுகளாகியும்
உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத
நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும்,
தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின்
தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற
நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம்
சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார்.
கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க
காத்துக் கொண்டிருதேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் உணவு
இடைவேளை விட்டு விடுவார்கள்.
அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன்.
என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற
வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று
சந்தோசமும், வருத்தமுமாக கலவையான
எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.

இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு
நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே
பாக்கியமாய் உணர்ந்தேன்.

இடையில் கிடைத்த இடைவேளையின்
போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார்
இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும்
உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள்
பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில்
அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.

இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று
பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச
நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன்
என்று சொல்லிக் கொண்டேன்.

அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார்
இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப்
பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும்
பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார்.
எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள்
‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும்
இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.

அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய்
இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது
அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில்
காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை
அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.

டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள்
என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று
உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது
போல பரபரப்பாகிவிட்டேன்.

உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது.
இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு
வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப்
பின் தொடர்ந்தேன்.

செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது.
‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன்
வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர
மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள்.
நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன்.
பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார்.
ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.

அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும்
இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட
இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
அவர்கள் பேசிய படியே இருந்ததால்
தொந்தரவு செய்து விடக் கூடாது என்று
அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும்
இடைப்பட்ட ஒன்று.

அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என்
முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே
சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும்
என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத
முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட்
அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை
கொடுத்தேன்.

‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப்
படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன்
‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன்.
பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி
கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார்.
‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா
வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத்
தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை
வணங்கினார் இயக்குனர்.

என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன்.
அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க.
அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க
மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க.
பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.

நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம்.
ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி
விட்டது.

‘ டே’ என்று குரல் கேட்டது.

என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப்
போகிறார்கள் என்று நினைத்த படி
என் சந்தோசத்தைக் கொண்டாடிக்
கொண்டிருந்தேன்.

‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல்
பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால்
அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.

‘உன் பேர் என்னடா’ என்றார்.

பதில் சொன்னேன்.

‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க
நாளைல இருந்து நீ தான் அடிக்கணும்
சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு
போனார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு
கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய்
டே க்கு இறங்கி விட்டாரே என்று
யோசித்தேன்.

இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர்
தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை
இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம்
அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை
அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும்
பொருட்டு செய்யும் அல்ப தந்திரம்
அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.

சினிமாவில் எனக்கான முதல் பாடமாய்
இதிலிருந்து துவங்கலாம் என்று
தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக
சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை
நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.

ஓவியக் கல்லூரியை நோக்கி கார் முழு
வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு
நடக்கும் விழாவிற்கு எங்கள் இயக்குனர்
சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார்.
தலை போவதால் தவிர்க்க முடியாமல் வாலாக
நானும் உடன் சென்று கொண்டிருந்தேன்.
இரட்டைவாலாக என் இனமாகிய உதவி இயக்குனர்
ஒருவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.

உதவியாளர்கள் அருகில் இல்லாமல் எந்த
வேலையும் செய்ய முடியாது சில இயக்குனர்களால்.
பாத்ரூம் போவது, மனைவியிடம் போவது தவிர
மற்ற நேரமெல்லாம் உதவியாளர்கள் உடன்
இருக்க வேண்டும். அதற்கு பாசமோ பற்றோ
காரணம் இல்லை.

பொது இடங்களில் அப்படி போவது ஒரு கெத்தாக
இருக்கும். இயக்குநரின் செல் போனை பாது காக்க,
பதில் சொல்ல. இன்ன பிற ஏவல்கள் புரிய. பொது
நிகழ்ச்சியில் பேசியது பற்றி ஜால்ராத் தனமான
கருத்துக்களை கேட்க. எல்லாவற்கும் மேலாக
தான் கொடுக்கும் 50 ரூபாய் பேட்டாவிற்கு
முடிந்த வரை பிழிந்து விட வேண்டும் என்ற
நல்லெண்ணமும் காரணம்.

நடு இரவில் இனி எங்கு சாப்பிடுவார்கள் என்ற
எண்ணம் எதுவும் இல்லாமல் தெரு முனையில்
காரை நிறுத்தி இறக்கி விட்டு நாளைக்கு
வழக்கம் போல எட்டரை மணிக்கு வந்திரு
என்ற கட்டளையோடு பயணம் நிறைவு பெறும்.

பொதுவாய் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏதாவது
சொல்லி சமாளிக்கப் பார்ப்பேன்.

ஆனால் இன்று உற்சாகமாகவே கிளம்பினேன்.
காரணம் சுரேந்திரன்.

ஒவியக் கல்லூரி என்ற வார்த்தையை எப்போது
கேட்டாலும் அவன் தான் நினைவுக்கு வருவான்.

சுரேந்திரன். சென்னைக்கு வந்த புதிதில் கிடைத்த
முதல் நண்பன்.

கோவையிலிருந்து வந்திருந்த நண்பருடன்
அவருக்குத் தெரிந்த ஒருவரைப் பார்ப்பதற்காக
தி.நகர் போகும் போது தெரியாது எனக்கு ஒரு
நண்பன் கிடைக்கப் போகிறான் என்று.

அறிமுகக் கை குலுக்கலின் போது பார்க்க
வந்தவரின் மகன் என்று நினைத்தேன்.

சொந்தக்காரரான அவரின் வீட்டில் தங்கிப்
படித்துக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.

அப்போது அவன் புதுக் கல்லுரியில் முதல்
ஆண்டு வரலாறு படித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனின் லட்சியமெல்லாம் ஓவியக்
கல்லூரியில் சேர்ந்து மாபெரும் ஓவியனாக
வேண்டும் என்பதாக இருந்தது.

இந்த ஆண்டு தேர்வு ஆகாததால் வரலாற்றுப்
பாடத்தை உறவுகளின் வற்புறுத்தல் காரணமாக
சிலுவை போல் சுமந்து கொண்டிருந்தான். இன்னும்
கொஞ்சம் பயிற்சித்து அடுத்த ஆண்டு எண்ணியது
எய்தும் உறுதியில் இருந்தான்.

நெடு நெடுவென்ற ஆறடி உயரமும். நடுவகிடு
எடுக்கப் பட்டு சற்று அதிகமாய் வளர்க்கப்
பட்டிருந்த முடியும், ஒடுங்கிய கன்னங்களும்
கனவுகள் சுடரும் பெரியபெரிய கண்களுமாக
ஓவியனை போலத் தான் இருந்தான்.,

பார்க்கப் போயிருந்தவர் படம் வரையரது
ஒரு பொழப்பா என்றார். அவன் முகம்
சுருங்கியது.

சினிமாவிற்காக போராட தயாராய் வந்திருந்த
எனக்கு அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது

கிளம்பும் முன் தனியே கிடைத்த சந்தர்ப்பத்தில்
இது உன்னோட வாழ்க்கை, உன்னோட கனவு,
யார் என்ன சொன்னாலும் மனச
விட்டுறாதேன்னு நம்பிகை சொல்லி விட்டு
கிளம்பினேன்.

சந்தித்துப் பிரிந்த மறுநாள் மாலை எனது
அலுவலகத்திற்கு வந்து விட்டான் சுரேந்திரன்.
எனது அலுவலகம் என்றால் எனக்குச்
சொந்தமானது என்று அர்த்தமில்லை.

அப்போது சென்னை வந்த புதிது. கலைவாணர்
அரங்கதிற்கு எதிரே எழுந்தருளி இருந்த சின்ன
ஒரு தனியார் நிறுவனத்தில் பெயரளவு
சம்பளத்திற்கு பெயரளவுக்கு வேலை செய்து
கொண்டு இருந்தேன். இராத் தங்கலும் அங்கேயே.

சினிமாவிற்காக வந்திருக்கிறான். சீக்கிரம் போய்
விடுவான் என்று தெரிந்தே கிடைத்த வேலை.
இவன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில்
எங்கள் ஊர் துரை டாக்டர் செய்த சிபாரிசில்
கிடைத்த வேலை அது.

அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு போனில்
பதில் சொல்லும் வேலை.சனி ஞாயிறுகளில்
பிரபல இயக்குனர்களின் வீட்டின் முன்னால்
அல்லது அலுவகத்தின் முன்னால் வாய்ப்புக்
கேட்டு தவமிருக்கும் வேலை.

மாலை 6 மணிக்கு வேலை முடியும் நேரத்தில்
சுரேந்தரன் வந்தான். நான் எதிர் பார்க்கவே
இல்லை.

தன்னைப் புரிந்து கொள்பவர்களைத் தேடி செய்த
யாத்திரைகளின் ஒரு பகுதியாக என் முன்னே
நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தான்.

நிறையப் பேசினோம். ஆறுதலும் நம்பிக்கையுமாய்
அவரவர் கனவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
பேச்சின் இடையில் தம்மடிக்க வெளியில் வந்தோம்.
அவனுக்கும் ஒரு சிகரெட் வாங்கி நீட்டிய போது
மறுத்தான். டீ, காபி கூட குடிக்காதவனாக இருந்தான்.
ஆச்சரியமாகத் தான் இருந்ததது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அசையாமல் உட்கார
வைத்து வித விதமாய் வரைந்து பழகத் துவங்கினான்.
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருப்பது கஷ்டம்
தான். என் கவிதைகளைப் படிக்கக் கொடுப்பது, நான்
படமாக்கப்போகும் எதிக்காலக் கதைகளைச் சொல்வது
என்று பதிலுக்கு பழி வாங்கி விடுவேன்.

மனம் குவித்து கூர்மையாய் பார்த்து அசுரத் தனமாய்
வரைந்து தள்ளுவான். ஒற்றை பென்சிலையும் வெள்ளைக்
காகிதத்தையும் வைத்துக் கொண்டு எதிரில் உள்ள எதையும்
அச்சு அசலாய் வரைந்துவிடுவதைப் பார்க்கும் போது
மாயஜாலங்கள் செய்யும் ஒருவனை போலவே அவன்
எனக்குத் தெரிவான்.

ஒருமுறை நூற்றி ஐம்பது ஹைகூ கவிதைகள் எழுதி
வைத்திருந்த நோட்டை படிக்க எடுத்துப் போனான்.
மறுநாள் அதைத் திருப்பிக் கொடுத்த போது அவன்
வைத்திருப்பது பென்சிலா அல்லது பென்சில் போல
வடிவில் இருக்கும் மந்திரக் கோலா என்று வியந்து
போனேன். அத்தனை கவிதைகளுக்கும் அற்புதமான
ஓவியங்கள் வரைந்திருந்தான். அந்த நோட்டே
அச்சடிக்கப் பட்ட புத்தகம் போலவே இருந்தது.

வாரத்திற்கு இருமுறையாவது ஓவியக் கல்லூரிக்கு
போய் வருவான். இப்போது படித்துக் கொண்டு
இருக்கிறவங்க கூட ஒன்ன மாதிரி ஒழுங்கா போக
மாட்டாங்க போல என்று கிண்டல் செய்தால் சிரித்துக்
கொள்வான். முதன் முறையாக சுற்றுலா சென்று வந்த
பள்ளிச் சிறுவன் போல கல்லூரியை வருணிப்பான்.

வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஒன்றாக சுற்றுவோம்.
சென்னைக்கு அவன் சீனியர் என்பதால் ஓவ்வொரு
இடமாக அவன் தான் அறிமுகப் படுத்தினான்.
நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து
கடைசிப் பேருந்தை விட்டு விட்டு அடிக்கடி
என்னோடேயே தங்கிக் கொள்வான்.

உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஐஸ் கட்டிப் போல கண் முன்னாலேயே காணாமல்
போகும் அந்த நட்பு என்று நினைக்கவே இல்லை.

அதற்கு அவனோ நானோ கூட காரணம் இல்லை.
செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினான்
சுரேந்திரன். ஒரு மாதம் விடுமுறை. கிளம்பவே
மனசில்லை அவனுக்கு. முடிந்த வரையில் சீக்கிரம்
வருவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

ஒரு மாதத்திற்குள் என்னென்னவோ நடந்து விட்டது.
அவன் கிளம்பி பத்து நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு
நாளில் எனது அலுவலகம் என்றென்றைக்குமாக
இழுத்துச் சாத்தப்படது. உரிமையாளருக்கான கடன்
நெருக்கடி முன்னிட்டு எடுக்கப் பட்ட முடிவாய்
இருந்தது அது.

தற்காலிக ஏற்பாடாக வடபழநியில் இருந்த ஒரு
நண்பனின் அறைக்கு குடிபெயர்ந்தேன். அடுத்து
என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடைகள்
தேடி முகட்டை பார்த்த படி முடங்கி கிடந்த போது
தான் அப்பாவின் கடிதம் வந்தது.

அப்பாவுக்குத் தெரிந்த ஒரு நண்பரின் சிபாரிசு கடிதம்
அது. பிரபல நடிகர் ஒருவரைச் சந்தித்து தரச் சொல்லி
அறிவுறுத்தப் பட்டிருந்தேன். சிபாரிசு கடிதம் தருபவர்
நடிகரோடு ஒன்றாகப் படித்தவர்.

நம்பிக்கை இல்லாமல் தான் நடிகரின் அலுவலுகத்திற்குப்
போனேன். ஆனால் அந்தக் கடிதம் ஆயிரம் பூட்டுகளைத்
திறந்து, ஒரு வார இடைவெளியில் நடிகர்—- தயாரித்து
நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக்கியது.

தேர்ந்த ஒரு கரத்தினால் சுழற்றி விடப் பட்ட பம்பரம்
போல அப்படி ஒரு சுழற்சி. ஒன்றரை வருடம் கழித்து
தான் படம் முடிந்து பம்பரம் கீழே விழுந்தது.

நேரம் கிடைத்ததும் முதல் வேலையாய் சுரேந்திரனை
தேடிப் போனேன். அவர்கள் வீடு மாறி இருந்தார்கள்.
பக்கத்து வீட்டில் யாருக்கும் மாறிப் போன முகவரியைச்
சரியாய் சொல்லத் தெரியவில்லை.

அப்படியாக நானும் அவனும் ஓரே ஊரில்
இருந்த படியே தொலைந்து போய்விட்டோம்.

எல்லாம் நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டது. இது
எனக்கு நாலாவது படம். பிரபல இயக்குனர்—- இடம்
இணை இயக்குநராய் ஓவியக் கல்லூரிக்கு அவரோடு
போய் கொண்டு இருக்கிறேன்.

இந்த ஆறு வருட காலத்தில் சுரேந்திரன் என்ன
ஆனான் என்று தெரியவிலை. சென்னையில்
இருக்கிறானா? இல்லை வெளியூர்லோ,சொந்த
ஊரிலோ இருக்கிறானோ? ஓவியக் கல்லூரியில்
படித்தானா? இல்லையா? ஒன்றும் தெரியாது.
இன்றைக்கு மனசு முழுவதும் நினைவாய்
என்னோடே இருக்கிறான்.

கார் ஓவியக் கல்லூரிக்குள் நுழைந்தது.
நரேந்திரனின் கோவில் இது என்று எனக்குள்
சொல்லிக் கொண்டேன்.

அனைவரும் இயக்குனருக்காக காத்திருந்தார்கள்.
இறங்கியதும் இயக்குனரின் கழுத்தில் மாலை
விழுந்தது. அதை அப்படியே கழற்றி அருகில்
இருந்த என்னிடம் கொடுத்தார்.

விழா நடை பெற தயாராய் இருந்ததால் உடனடியாக
மேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் எங்கள்
இயக்குனர். மேடையில் ஏறும் முன்னால் செல் போனை
என்னிடம் கொடுத்து விட்டுத் தான் போனார்.

முன் வரிசையில் அமர்ந்து கொள்ள இருக்கைகள்
காட்டப் பட்ட போது நண்பரை உட்கார வைத்து
விட்டு, மாலையைக் கொண்டு காரில் வைக்கும்
காரணம் சொல்லி தப்பி வந்தேன்.

அங்கே நின்றிருந்த ஓட்டுநரிடம் மாலையை
ஒப்படைத்து விட்டு கல்லூரியை சுற்றிப்
பார்க்க கிளம்பினேன்.

வழியில் அங்கங்கே சிற்பங்களாய் இருந்தது. சுவர்கள்
முழுவதும் மாணவர்களின் ஓவியங்கள். வர்ண
கலாட்டாவாக இருந்தது.

கழிப்பறை ஒன்றின் சுவரில் முழுதும் வண்டுகள்
எதையோ தனது கால்களில் எடுத்துக் கொண்டு
போய் கொண்டு இருந்ததைப் போல் ஓவியம்.
சிரிப்பு வந்தது. கிராமத்து அநுபவம் இருப்பவர்களால்
தான் அதை ரசிக்க முடியும். வண்டுருட்டாம் பழம்
என்று சிறுவர்கள் கிண்டல் செய்வார்கள்.
பொருத்தமான இடத்தில் பொருத்தமான ஓவியம்.

அங்கங்கே மரங்கள். பூக்கள். சிற்பங்கள்.ஓவியங்கள்.
ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும் பின்னணியில்
சுரேந்திரனின் குரல் விவரணை எனக்குள் ஓடியது.

சுற்றி முடித்து திரும்பும் போது விழா பாதி
முடிந்திருந்தது. யாரோ ஒருவர் சுவாரஸ்யமாகப்
பேசிக் கொண்டு இருந்தார்.

நிறைய மாணவர்கள் பெண்களுக்கு இணையாக
முடி வளர்த்திருந்தார்கள். பாதிக்குப் பாதி
மாணவர்கள் பிரஞ்சு தாடி வைத்திருந்தார்கள்.
பெண்கள் குறைவாகவே இருந்தார்கள்.

இவர்களுக்கு நடுவே சுரேந்திரன் எங்காவது இருந்து
விட மாட்டானா என்றொரு ஆசை விட்டு விட்டு
மின்னிக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புகளே
இல்லை என்பதும் தெரிந்து தான் இருந்தது.

முதல் வரிசையில் இருந்து ஒவ்வொருத்தரையாய்
பார்த்துக் கொண்டு இருந்தேன்.

மாணவர்களில் சில பேர் விழா நடக்கும் இடத்தை
விட்டு கொஞ்சம் தள்ளி குழு குழுவாக நின்று
அரட்டை அடித்துக் கொண்டும், தம் அடித்துக்
கொண்டும் இருந்தார்கள்.

அவர்களையும் ஒவ்வொருவராய் ஆராயத்
தவறவில்லை எனது கண்கள்.

இதற்கிடையில் இயக்குனரின் செல் பேசிக்கு
அழைப்பு வந்தது, அங்கே சப்தமாய் இருந்ததால்
சிறிது தொலைவுதள்ளிப் போய் பேசினேன்.
இயக்குனரின் வீட்டில் இருந்து அழைப்பு.

பேசிக் கொண்டிருக்கும் போதே எதிரில் போன
ஒருவன் சுரேந்திரன் மாதிரியே இருந்தான். நிறம்
மங்கி தாடி அடர்ந்த மெலிந்திருந்த அவன் சுரேந்திரன்
தானா என்று சந்தேகமாய் இருந்தது.

முழு கவனமும் அவன் மேல் குவிந்து கண்கள்
இமைக்காமல்அவன் மீது நிலைத்தது. நடை கூட
அவன் மாதிரியே இருந்தது.

அவன் படித்திருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குள்
படித்து முடித்து வெளியேறி இருக்க வேண்டும்.
அவனிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

ஆனாலும் என்னை அறியாமல் நான் அவனைப்
பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை அவனைச் சந்திக்க வேண்டும் என்ற
எனது ஆசைகள் தான் அவனை அழைத்து வந்து
விட்டதா? அல்லது அதே ஆசைகள் காரணமாய்
எவனோ ஒருவன் என் நண்பனைப் போலவே
தெரிகிறானா?

விரைவாய் நடந்து அருகில் போனேன். சுரேந்திரன்
இவ்வளவு மெலிந்திருக்க மாட்டானே என்று
மனசு முன்னுக்கும் பின்னுக்குமாக அலைக்
கழித்தது.

ஒரு கட்டத்தில் மனசு அது அவன் தான்
என்று உறுதி செய்தது.

வேக வேகமாக நடந்து அவனைத் முந்தி
முன்னால் போய் அவன் முகத்தைப்
பார்த்தேன். அவன் தான். அவனே தான்.

அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்காமல்
அனிச்சை செயலாய் வாய் ‘சுரேந்திரா’
என்றது.

அவன் அதிர்ந்து நின்றான். அவன் தான்.
அவனே தான்.

அவன் என்னைப் பார்த்த பார்வையில்
யார் நீ என்ற கேள்வி இருந்தது. ஆறு
வருட காலத்தில் நானும் மாறித் தானே
இருக்கிறேன்.

நான் தான் என்று பெயரைச் சொன்னதும்
சலனமற்ற குளத்தில் கல் எறிந்ததும்
எழும் சலனம் போல் முகத்தில்
ஒரு மாற்றம்.

‘ஆறு வருசத்துக்கு முன்னால வாலஜா
ரோட்டுல என்னோட ஆபிஸ்ல என்ன
உக்கார வச்சு வரஞ்சு தள்ளுவியே
மறந்துட்டயா?’ என்றேன்.

என்றாவது அவனைச் சந்திப்பேன் என்பது
எனக்குத் தெரியும். அதை பல முறை கற்பனையில்
பார்த்திருக்கிறேன். ஆனால் இது போல்
விளக்கங்கள் சொல்ல நேரும் என்று
நினைத்தது இல்லை.

ஓ நீயா என்பது போல மெல்லிதாய்
அவனிடம் ஒரு புன்னகை. அதை
புன்னகை என்று கூட சொல்ல
முடியாது. ஒரு உதட்டசைவு அல்லது
உதடு திறப்பு என்று வேண்டுமானால்
சொல்லலாம்.அவ்வளவு தான்.

‘ நான் மூணு படத்தில வேலை பாத்துட்டேன்.
இப்ப நாலாவது படம். எங்க டைரக்டர் கூட
தான் வந்திருக்கேன். நீ இன்னுமா படிக்கிறா?’
என்று கேட்டதும் உடனடியாய் பதிலில்லை.

அவன் கண்கள் சிவந்து கிடந்ததை அப்போது
தான் பார்த்தேன்.

சிறிது நேரம் கழித்து ‘யூஜி முடிசிட்டு இப்போ
பீஜீ கடைசி வருசம்’ என்று பதில் வந்தது.
அதோடு சேர்ந்து மது வாசனையும்.

நன்றாகக் குடித்திருக்கிறான். அதுவும்
கல்லுரிக்குள்ளேயே. அதிர்ந்து போனேன்.
அவனது மாற்றம் நம்ப முடியாமல்
இருந்தது.

கொஞ்ச நேரம் மெளனமாய் நகர்ந்தது.
அவன் ஜீன்சுக்குள் கை விட்டு கிங்ஸ்
சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஒன்றை
வாயில் பொருத்திய படியே சிகரெட்
பாக்கெட்டை என்னிடம் நீட்டினான்.
அதில் இன்னும் இரண்டு சிகரெட்டுகள்
மீதம் இருந்தது. வேண்டாமென்ற மறுப்பாய்
தலையை ஆட்டினேன். அவன் சிகரெட்டை
பற்ற வைத்துக் கொண்டான்.

ஆழ்ந்து இழுத்து புகையை வெளியேற்றினான்.
மனிதர்கள் இப்படியா மாறி போக முடியும்
நூறு சதவீதமும் என்று வி